ஏப்ரல் 18, 2011

பான் கீ மூன் நியமித்திருந்த நிபுணர் குழு சமர்பித்துள்ள அறிக்கையின் சுருக்கம்..

இலங்கையில் இடம்பெற்ற சில உரிமை மீறல்கள் போர்க் குற்றங்களின் தன்மையையும் மனிதத்துவத்திற்கு எதிரான  குற்றச் செயல்களின் தன்மையையும் கொண்டுள்ளன என்று நிபுணர் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்திருந்த நிபுணர் குழு கடந்த செவ்வாய்க்கிழமை அறிக்கையை கையளித்திருந்தது. அதன் சாராம்சம்
நேற்று ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையின் சுருக்கம் வருமாறு:
குற்றச்சாட்டுகள் நம்பகரமானவை எனக் குழுவினால் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் இந்த நாள் வரை யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் தொடர்பாக தெரிவிக்கப்படும் கருத்துகளிலிருந்தும் மிகவும் வேறுபட்ட தன்மையை குற்றச்சாட்டுகள் நம்பகரமான முறையில் வெளிப்படுத்துவதாக நிபுணர் குழுவின் தீர்மானம் அமைந்துள்ளது. பொதுமக்கள் இழப்புகள் எதுவுமின்றிய கொள்கைகளுடன் மனிதாபிமான மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்ததாக அரசாங்கம் கூறுகிறது. இதற்கு முற்றிலும் முரண்பாடான வகையில் குற்றச்சாட்டுகள் நம்பகரமானதென நிபுணர் குழு கண்டறிந்துள்ளது.
அவை நிரூபிக்கப்பட்டால் சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் மனித உரிமைகள் சட்டம் என்பவை பாரியளவில் பாரதூரமான முறையில் மீறப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகிறது. இலங்கை அரசாங்கத்தினாலும் புலிகளினாலும் இவை இந்த உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் சில போர்க் குற்றங்களின் தன்மையைக் கொண்டவை. அத்துடன் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றச்செயல்களின் தன்மையையும் கொண்டவையாகும். உண்மையில் யுத்தம் இடம்பெற்ற விதமானது சர்வதேச சட்டத்தின் முழுப் பரிமாணத்தின் மீதும் பாரதூரமான முறையில் இடம்பெற்ற தாக்குதலாக காணப்படுகிறது. போர் மற்றும் சமாதானத்தின் போது தனிப்பட்ட கௌரவத்தை பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சர்வதேச சட்டத்தின் முழுப்பரிமாணத்தின் மீதும் இடம்பெற்ற தாக்குதலாக தென்படுகிறது.
2008 செப்டெம்பருக்கும் 2009 மே 19 இற்கும் இடைப்பட்ட காலத்துக்கும் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டங்களுடன் தொடர்புபட்டவையாக குற்றச்சாட்டுகள் இருப்பதை குழு கண்டறிந்துள்ளது. இலங்கை இராணுவமானது பாரியளவில் அதிக எண்ணிக்கையான பொதுமக்கள் இழப்புகளுக்குக் காரணமான ஷெல் தாக்குதல்களை பரந்துபட்டதாக நடத்திக் கொண்டு தனது இராணுவ நடவடிக்கையை வன்னிக்குள் முன்னெடுத்துள்ளது. வன்னி மக்கள் மீதான நடவடிக்கையாக இந்த நடவடிக்கை அமைந்திருந்தது.
சுருங்கிக் கொண்டிருக்கும் பகுதியில் சுமார் 3 இலட்சத்து 30 ஆயிரம் பொதுமக்கள் அகப்பட்டிருந்தனர். ஷெல் வீச்சினால் வெளியேறிக் கொண்டிருந்த அவர்களை புலிகள் பணயக் கைதிகளாக வைத்திருந்தனர். அரசாங்கமானது ஊடகங்களையும் யுத்தத்தை விமர்சிக்கும் ஏனையோரையும் அச்சுறுத்த மற்றும் மௌனமாக்கும் நடவடிக்கைகளை நாடியிருந்தது. கடத்தலுக்கு வெள்ளை வான்களை பயன்படுத்துதல், மக்களை காணாமல் செய்தல் உட்பட பல்வேறுபட்ட அச்சுறுத்தல்கள், நடவடிக்கைகள் ஊடாக அரசாங்கம் ஊடகங்களையும் யுத்தத்தை விமர்சிப்போரையும் அச்சுறுத்தி மௌனமாக்குவதை நாடியிருந்தது.
3 தொடர்ச்சியான மோதல் சூன்ய வலயங்களின் பாரியளவிலான ஷெல் தாக்குதலை அரசாங்கம் நடத்தியிருந்தது. அந்த வலயங்களில் பொதுமக்களை ஒன்றுகூடுமாறு அரசாங்கம் ஊக்குவித்திருந்தது. கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதாக சுட்டிக்காட்டியிருந்த பின்னரும் கூட ஐ.நா.வின் இடங்கள், உணவு விநியோக மார்க்கங்கள், ஐ.சி.ஆர்.சி.யின் கப்பல்கள் என்பவற்றின் மீது ஷெல் வீச்சுகளை நடத்தியிருந்தது. கடற்கரைகளிலிருந்து காயமடைந்தோரையும் அவர்களின் உறவினர்களையும் கொண்டு செல்வதற்காக வந்துகொண்டிருந்த ஐ.சி.ஆர்.சி. கப்பல்கள் மீது ஷெல் வீச்சு நடத்தியிருந்தது.
விளைவைப் பற்றி அறிந்துகொண்டிருந்த போதிலும், ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளது. சொந்த புலனாய்வு முறைமைகள் மற்றும் ஐ.நா., ஐ.சி.ஆர்.சி., ஏனையோர்களினால் விடுக்கப்பட்ட அறிவித்தல்கள் என்பன வழங்கப்பட்டிருந்தும் ஷெல் தாக்குதல் இடம்பெற்றிருந்தது. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போதான அநேகமான பொதுமக்கள் இழப்புகள் அரசாங்கத்தின் ஷெல் வீச்சின் காரணமாக இடம்பெற்றுள்ளன.
முன்னரங்கங்களின் உள்ள ஆஸ்பத்திரிகள் மீது படிமுறையாக அரசாங்கம் ஷெல் வீச்சை நடத்தியுள்ளது. வன்னியிலிருந்த சகல மருத்துவமனைகளுமே மோட்டார், ஆட்லரித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. சில மருத்துவமனைகள் திரும்பத் திரும்ப தாக்குதலுக்குள்ளாக்கியுள்ளன. அவை எங்கிருக்கின்றன தொடர்பாக அரசாங்கம் நன்கு அறிந்திருந்தது என்ற உண்மைக்கும் மத்தியில் இவை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. மோதல் வலயத்திலுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவி கிடைப்பதை அரசாங்கம் படிமுறையாக பறித்திருந்தது.
உணவு, மருந்துப் பொருள் விநியோகம் குறிப்பாக சத்திரசிகிச்சை விநியோகங்கள் என்பன கிடைக்காத நிலைமை ஏற்பட்டது. இது அவர்களின் துன்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. முடிவில் மோதல் வலயத்தில் இருந்த பொதுமக்களின் எண்ணிக்கையை நோக்கத்தின் அடிப்படையில் குறைவாக அரசாங்கம் கணிப்பீடு செய்திருந்தது. 2009 ஜனவரி தொடக்கம் மே வரை பல்லாயிரக்கணக்கானோர் தமது உயிரை இழந்தார்கள். இறுதி நாட்களில் இனம்தெரியாத வகையில் பலர் இறந்தனர்.
மோதல் வலயத்திலிருந்து பொதுமக்கள் வெளியேறிய பின்னர் அவர்கள் மேலும் துன்பப்படும் நிலைமைக்கு யுத்தத்தில் தப்பியோரையும் பாதிக்கப்பட்டோரையும் அரசாங்கம் இலக்காக்கியது. ஏதாவது வெளிப்படைத்தன்மையோ வெளிமட்ட கண்காணிப்போ இல்லாமல் புலிகள் என சந்தேகப்பட்டோர்கள் கண்டுபிடிப்பதற்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களின் வேறாக்கப்பட்ட சிலர் நீதி விசாரணைக்குப் புறம்பான வகையில் மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். பெண்களில் சிலர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருக்கும் நிலைமையுள்ளது. ஏனையோர் காணாமற் போய்விட்டனர். அவர்களின் மனைவிமாரும் உறவினர்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளின் போதும் இவற்றை தெரிவித்துள்ளனர். இடம்பெயர்ந்த சகலரும் மூடப்பட்ட முகாம்களில் வைக்கப்பட்டிருந்தனர்.
அதிகளவு சனநெரிசலானது மிக மோசமான நிலைமையை ஏற்படுத்தியிருந்தது. தடுத்து வைக்கப்பட்டோரின் அடிப்படை சமூக, பொருளாதார உரிமைகள் மீறப்பட்டன. தேவையற்ற விதத்தில் பல உயிர்கள் இழக்கப்பட்டன. முகாம்களில் இருந்த சிலர் விசாரணைக்குள்ளாக்கப்பட்டனர். சித்திரவதைக்கு இலக்காகினர். புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் ஏனைய இடங்களுக்கு மாற்றப்பட்டனர். வெளியுலகத்துடன் அவர்களுக்கு தொடர்புகள் இருக்கவில்லை. இந்த நிலைமைகள் அவர்களை மேலும் நலிந்த நிலைமைக்குக் கொண்டு சென்றதுடன் துஷ்பிரயோகத்துக்கு இலக்காகும் தன்மைக்கு வழிவகுத்திருந்தது.
மோதல் வலயத்தில் காணப்பட்ட மிகப் பயங்கரமான ஆபத்தான நிலைமையிலும் பொதுமக்கள் வெளியேறுவதற்கு புலிகள் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். அவர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்தனர். முன்னேறி வரும் இலங்கை இராணுவத்திற்கும் தமக்குமிடையில் பொது மக்களை தந்திரோபாய ரீதியில் அரணாக அவர்கள் பயன்படுத்தினர்.
போர்க் காலம் முழுவதும் பலவந்தமாக ஆட்சேர்ப்புக் கொள்கை அமுல்படுத்தியிருந்தது. ஆனால், யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் உட்பட சகல வயதுடைய மக்களையும் ஆட்சேர்ப்புச் செய்வது அதிகரித்திருந்தது. தமது சொந்தப் பாதுகாப்பிற்காக பதுங்கு குழிகளைத் தோன்றுமாறு புலிகள் பொதுமக்களை பலவந்தப்படுத்தினர். அதனால் போராளிகளுக்கும் பொதுமக்களுக்குமிடையிலான வேறுபாடு அறிந்து கொள்வது கடினமானதாக இருந்ததுடன், மேலும் பொது மக்களுக்கு துன்பம் ஏற்பட்டது. யுத்தத்தை முன்னெடுக்கும் வேட்கையுடன் இவை யாவும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த யுத்தம் தெளிவான முறையில் தோல்வி கண்டிருந்தது. புலிகளின் நோக்கத்துக்காகவும் தமது சிரேஷ்ட தலைமைத்துவத்தை பாதுகாப்பதற்குமான அவர்களின் முயற்சிகளின் போதும் பொது மக்கள் பலர் தியாகம் செய்துள்ளனர்.
2009 பெப்ரவரி தொடக்கம் மோதல் வலயத்திலிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த பொதுமக்கள் மீது துவக்குச் சூட்டை புலிகள் ஆரம்பித்திருந்தனர். யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் மீதான மரணத்தின் தொகையை இவையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கச் செய்திருந்தன. அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் பாரிய குழுக்களாக இருந்த இடத்துக்கு சமீபமாக புலிகள் ஆட்லரித் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். ஆஸ்பத்திரிகள் போன்ற பொதுமக்கள் தங்கியுள்ள இடங்கள் மற்றும் இடம்பெயர்ந்தோர்க்கு சமீபமாக இருந்த இராணுவக் களஞ்சியங்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தியிருந்தன. யுத்தத்தின் இறுதிக் கட்டங்கள் பூராவும் புலிகள் மோதல் வலயத்திற்கு வெளியே தற்கொலைத் தாக்குதலை நடத்தும் கொள்கையைத் தொடர்ந்தனர். மோதலின் முன்னைய கட்டங்களின் ஒப்பிடுகையில் இந்த மாதிரியான ஊடுருவல் தாக்குதலின் ஆற்றல் குறைந்திருந்த போதிலும் மோதல் வலயத்திற்கு வெளிப்புறத்தே பொது மக்களுக்கு எதிரான தாக்குதலை புலிகள் மேற்கொண்டிருந்தனர்.
இதனடிப்படையில் முடிவாகக் கூறினால் இலங்கை அரசாங்கத்தினால் பாரதூரமான மீறல்கள் இழைக்கப்பட்டுள்ளன என்பதையும் நம்பகரமான குற்றச்சாட்டுகள் ஐந்து முக்கியமான வகையில் இருப்பதையும் குழு கண்டறிந்துள்ளது.
1. பரந்துபட்ட ஷெல் தாக்குதலினால் பொதுமக்கள் கொல்லப்பட்டமை
2. வைத்தியசாலைகள் மற்றும் மனிதாபிமான இடங்கள் மீது ஷெல் வீச்சு
3. மனிதாபிமான உதவி மறுப்பு
4. இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் புலி உறுப்பினர்கள் என சந்தேகப்பட்டவர்கள் உட்பட மோதலில் தப்பியோர், பாதிக்கப்பட்டோர் அனுபவித்த மனித உரிமை மீறல்கள்
5. மோதல் வலயத்திற்கு வெளிப்புறத்தே இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள். இதில் ஊடகங்கள் மற்றும் அரசை விமர்சிப்போர் உள்ளடக்கும்.
இதேவேளை, யுத்தத்தின் இறுதிக்கட்டங்களின் போதும் புலிகளுக்கு எதிரான நம்பகரமான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நிபுணர் குழுவின் தீர்மானமானது 5 முக்கியமான விடயங்களை கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. பொதுமக்களை மனிதக் கவசமாகப் பயன்படுத்தியமை
2. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த பொதுமக்களை கொன்றமை
3. பொதுமக்கள் இருந்த சமீபமாக இராணுவக் கருவிகளைப் பயன்படுத்தியமை
4. சிறுவர்களைப் பலவந்தமாக சேர்த்துக் கொண்டமை
5. பலவந்தமாக தொழிலில் ஈடுபடுத்தியமை
6. தற்கொலைத் தாக்குதலுக்கு ஊடாக பொதுமக்களைக் கொன்றமை
பதிலளிக்கும் கடப்பாடு
சர்வதேச மனிதாபிமான அல்லது மனித உரிமைகள் சட்ட மீறல்களுக்கான பதிலளிக்கும் கடப்பாடானது இங்கு தெரிவுக்கான அல்லது கொள்கைக்கான விடயமாக இருக்கவில்லை. உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் இது ஒரு கடமையாகும். நம்பகரமான முறையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இந்த மீறல்கள் பாரதூரமான விசாரணைக்கான தேவையை முன்வைக்கின்றன. இவற்றுக்கு பொறுப்பு வாய்ந்தவர்களை விசாரணை செய்வதற்கான தேவையையும் இவை முன்வைத்துள்ளன. இக்குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் இலங்கையின் இராணுவத் தளபதிகள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், புலிகளின் இராணுவ பொது மக்கள் தலைவர்கள் உட்பட மிகவும் பொறுப்பு வாய்ந்தவர்கள் சர்வதேச குற்றங்களுக்கான குற்றப் பொறுப்பை சுமக்கவேண்டும்.
அதேவேளை, பதிலளிக்கும் கடப்பாடானது விசாரணை மற்றும் பாரதூரமான குற்றங்களை விசாரணை செய்தல் என்பனவற்றுக்கும் அப்பாற்பட்டதாகும். இது விரிவான நடவடிக்கைகளைக் கொண்டதாகும். மனித உரிமைகள் மற்றும் கௌரவம் ஆகியவை கடந்த காலத்தில் மீறப்பட்டதற்காக தனிப்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்களின் அரசியல் தார்மீக சட்டப் பொறுப்பை நிறைவேற்றுவதாக இந்த பரந்துபட்ட நடவடிக்கைகள் அமையவேண்டும். மேற்குறிப்பிட்ட சர்வதேச தரத்துக்கு அமைவான விதத்தில் பதிலளிக்கும் கடப்பாடு இருப்பது தேவையானதாகும். பாதிக்கப்பட்டோருக்கு உண்மையும் நியாயமும் கிடைப்பதும் இதில் உள்ளடக்கியுள்ளது.
தனது பொதுமக்களின் உரிமைகள் மீறப்படும் சம்பவங்கள் இடம்பெறும் போதும் அதன் வகிபாகம் பொறுப்பு என்பனவற்றை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்வதற்கு பதிலளிக்கும் கடப்பாடானது தேவைப்படுகிறது.    ஐ.நா.வின் கொள்கையை பேணிக் கடைப்பிடிக்கும் நிலைமையில் சகலருக்கும் ஆலோசனை கூறும் சூத்திரத்தையோ அல்லது பதிலளிப்பதற்கான வெளிநாட்டு முன்மாதிரிகளை தருவிப்பதையோ நிபுணர் குழுவானது ஆலோசனையாக முன்வைக்கவில்லை. விரிவான முறையில் பிரஜைகளின் பங்களிப்பை உள்ளடக்கியதும் அவர்களின் தேவைகள் அபிலாஷைகளைக் கொண்டதுமான வரையறுக்கப்பட்ட தேசிய மட்டத்திலான கணிப்பீடுகளை உள்ளடக்கியதாக பதிலளிக்கும் கடப்பாட்டின் நடவடிக்கைகள் இருக்கவேண்டிய தேவையை நிபுணர் குழு அடையாளம் கண்டுள்ளது.
எந்தவொரு தேசிய நடவடிக்கைகளும் சர்வதேச தரத்தை கொண்டவையாக இருக்க வேண்டுமென்றபோதிலும் பதிலளிக்கும் கடப்பாட்டிற்கான இலங்கையின் அணுகுமுறையானது சர்வதேச தரத்திற்கு எதிரானதாக இருக்கின்றதா என கணிப்பீடு செய்து கொள்தல் அவசியமாகும். அத்துடன் யுத்ததத்தின் இறுதிக் கட்டங்களின் போது பொதுமக்கள் தமது உரிமைகளை விளங்கிக் கொண்டிருப்பதற்கு பொது மக்களுக்கு இடமளிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.  நல்லிணக்கத்திற்கும் பதிலளிக்கும் கடப்பாட்டிற்கும் இடையில் சமத்துவத்தை நாடிக் கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.
நீதியை நிலைநாட்டுவதாக வலியுறுத்தியுள்ளது.     நீதியை நிலைநாட்டும் அரசாங்கத்தின் கருத்தானது குறைபாடுகளைக் கொண்டிருப்பதாக நிபுணர் குழு தனது கருத்தை தெரிவித்துள்ளது. கடந்த கால அரசாங்கத்தின் கொள்கைகள் பயங்கரவாதத்திலிருந்து பொதுமக்களை கடந்த கால அரசாங்கம் தவறியமை என்பவற்றைக் கொண்ட வெறுமையான கருத்தையே அரசாங்கம் கொண்டிருக்கின்றது. பெரும்பான்மையான விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்தல் மற்றும் தீவிரவாத புலி உறுப்பினர்களுக்கு குறைவான தண்டனை வழங்குதல் என்ற கருத்தை அரசாங்கம் கொண்டிருக்கின்றது.
பதிலளிக்கும் கடப்பாட்டிற்கான அரசாங்கத்தின் இருவிதமான அபிப்பிராயங்கள் நிபுணர் குழுவுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த கால அரசாங்கங்களின் பொறுப்பு மற்றும் புலிகள் தொடர்பாக கருத்தை செலுத்துதல் என்பன யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது செயற்பட்ட விதத்தை விசாரணை செய்தல், அதற்குப் பின்னரான நிலைமைகளை விசாரணை செய்தல், சட்ட மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்தல் போன்ற விடயங்களில் தீவிரமான பரிசீலனையை அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்பதைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.
பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பாக அரசாங்க நிலைப்பாடானது சர்வதேச தரத்திற்கு காணப்படவில்லையென்ற தீர்மானத்திற்கு நிபுணர் குழு வந்துள்ளது. இரு தரப்பினாலும் இழைக்கப்பட்ட உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு இதயசுத்தியுடன் அரசாங்கம் தீர்வு காணாதுவிடின் சர்வதேச எதிர்பார்ப்புகள் வேகமாக குறைவடையும் தன்மை காணப்படுகிறது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 2002 போர் நிறுத்த உடன்படிக்கை தொடக்கம் 2009 மே இல் யுத்தம் முடிவுக்கு வந்த காலம் வரையிலான விடயங்களுக்குத் தீர்வுகாண அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்திருந்தது.
இலங்கையின் மோதல் தொடர்பாக தேசிய மட்டத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கான பயணுள்ள வாய்ப்பை இந்த ஆணைக்குழு கொண்டிருக்கின்றது. அந்த தேசிய மட்டத்திலான கலந்துரையாடலின் தேவையை பெரும் தொகையான மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக பாதிக்கப்பட்டோர் அதனை தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். ஆணைக்குழுவுடன் பேசுவதற்கு சொந்த முன்முயற்சியை அவர்கள் எடுத்துள்ளனர்.
ஆயினும் நல்லிணக்க ஆணைக்குழுவானது சுயாதீனம் மற்றும் பக்கச்சார்பின்மை விடயங்களின் முக்கியமான சர்வதேச தரத்தை கொண்டிருக்கின்றதென்ற திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆணைக்குழுவின் சில உறுப்பினர்கள் முரண்பட்ட நலன்களை கொண்டவர்களாக இருக்கின்றனர். அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு அளிக்கப்பட்ட அதிகாரமானது பாரதூரமான சர்வதேச மனிதாபிமான, மனித உரிமைகள் சட்ட மீறல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான முறைமையைக் கொண்டிருக்கவில்லை.
அத்துடன் பல தசாப்தகாலங்களாக நீடித்த இனப்பிரச்சினைக்கான அடிப்படை காரணங்களை பரிசீலிப்பவையாக அமைந்திருக்கவில்லை. பதிலாக அரசியல் பொறுப்பு தன்மை பற்றியே வலுவான கவனத்தை செலுத்துவதாக இந்த ஆணைக்குழு காணப்படுகிறது. பதிலளிக்கும் கடப்பாடு கோட்பாடு தொடர்பாக குறைபாடுகளையும் பக்கச்சார்பான தன்மையையும் கொண்டதாகவே இது அமைந்துள்ளது.
இதுகாலவரையும் அந்த ஆணைக்குழுவின் பணிகளானவை யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் என்ன நடந்தது என்பது தொடர்பான உண்மையை கண்டறியும் விதத்தில் இதயசுத்தியுடன் மேற்கொள்ளப்பட்ட தன்மையை ஆணைக்குழு கொண்டிருக்கவில்லை என்பது வெளிப்படுத்தப்படுகிறது. யுத்தத்தில் இருதரப்பினராலும் பாரதூரமான வகையில் மீறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக படிமுறையாகவும் பக்கச்சார்பின்றியும் விசாரணை செய்ய இந்த ஆணைக்குழு முற்படவில்லை. மேலும் சாட்சியங்களுக்குத் தேவையான போதியளவு பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
முடிவாகக் கூறின் நல்லிணக்க ஆணைக்குழுவானது பல குறைபாடுகளை கொண்டுள்ளது. வினைத்திறனுடனான பதிலளிக்கும் கடப்பாட்டு பொறிமுறையைக் கொண்ட சர்வதேச தரத்தை இது வைத்திருக்கவில்லை. ஆதலால் இலங்கை ஜனாதிபதியும் ஐ.நா.செயலாளர் நாயகமும் பதிலளிக்கும் கடப்பாட்டு நடவடிக்கைகளில் இணைந்து உறுதிப்பாட்டை மேற்கொண்டிருந்த போதிலும் அவற்றை திருப்திப்படுத்துவதாக இந்த ஆணைக்குழுவின் செயற்பாடு அமையவில்லை.
ஏனைய உள்மட்டப் பொறிமுறைகள் பதிலளிக்கும் கடப்பாட்டை முன்னெடுப்பதற்கு நீதிமுறைமையானது முன்னணிப் பங்களிப்பை வழங்கவேண்டும். நல்லிணக்க ஆணைக்குழு செயற்பாடுகள் அல்லது விளைவுகளை பொருட்படுத்தாத விதத்தில் இந்த வகிபாகத்தை நீதிமுறைமை முன்னெடுக்க வேண்டும். எவ்வாறாயினும் இந்த முறைமையின் கடந்த கால செயற்பாடு மற்றும் தற்போது கட்டமைப்பு என்பனவற்றை மீளாய்வு செய்வதன் அடிப்படையில் நிபுணர் குழுவானது சிறிய அளவு நம்பிக்கையே இதில் கொண்டுள்ளது.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நீதிக்கு சேவையாற்றும் என்பது தொடர்பாக சிறியளவு நம்பிக்கையையே நிபுணர் குழு கொண்டுள்ளது. ஆற்றல் குறைபாட்டிலும் பார்க்க அரசியல் விருப்பம் தொடர்பான குறைபாட்டையே அதிகளவுக்கு இதில் கொண்டுள்ளது. குறிப்பாக சட்ட மா அதிபரின் சுதந்திரம் கடந்த அண்மைக்காலத்தில் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரம் ஜனாதிபதியிடம் அதிகளவுக்கு ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளது. யாவற்றிக்கும் மேலாக அவசரகால ஒழுங்குவிதிகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்துடன் இணைந்ததாக தொடர்ந்து இருந்துவருகிறது. அதன் தற்போதைய வடிவமானது மனித உரிமைகளை உத்தரவாதப்படுத்தி பேணி கடைப்பிடிக்கவேண்டிய போது தவறாகச் செயற்படுவதற்கு இயலுமான விதத்தில் இது காணப்படுகிறது. அதாவது தற்போதைய நீதித்துறை முறைமையானது தடையாக அமைந்துள்ளது.
அதேவேளை, இராணுவ நீதிமன்ற முறைமையானது வினைத்திறனுடனான பதிலளிக்கும் கடப்பாட்டு பொறிமுறைகள் கொண்டதாக இயங்கியதால் என்பது தொடர்பாக ஆதாரத்தை நிபுணர் குழு பார்த்திருக்கவில்லை. அதாவது நம்பகரமான குற்றச்சாட்டுகள் அதாவது இராணுவ நீதிமன்ற முறைமையினால் அடையாளம் காணப்பட்ட குற்றச்சாட்டுகள் அல்லது யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது இழைக்கப்பட்ட ஏனைய குற்றங்கள் தொடர்பாக பதிலளிக்கும் கடப்பாட்டு முறைமையை இராணுவ நீதிமன்றம் கொண்டிருந்ததை பார்ப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
கடந்த மூன்று தசாப்தங்களாக மனித உரிமை மீறல்கள் விவகாரங்களை ஆராய்வதற்கு விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தன. அவற்றில் சில உண்மையை கண்டறியும் முக்கிய இலக்குகளாக சேவையாற்றின. ஆயினும் அடையாளம் காணப்பட்ட மீறல்களுக்கான விரிவான பொறுப்புக் கூறும் பெறுபேற்றை வழங்குவதில் அவை தோல்வி கண்டுள்ளன. அத்துடன் அறிக்கையை பகிரங்கப்படுத்த பல ஆணைக்குழுக்கள் தவறிவிட்டன. அவற்றின் சிபார்சுகள் அபூர்வமாகவே அமுல்படுத்தப்பட்டன. இலங்கை மனித உரிமைகள ஆணைக்குழுவானது இப்போதும் பாரதூரமான கவலைகளையும் எண்ணங்களையும் கொண்டதாக உள்ளது. காணாமற் போனோர் மற்றும் தடுத்து வைக்கப்பட்டோரின் நலன்கள் தொடர்பாக விடயங்களை மேற்கொள்வதற்கான விடயங்களை அரசியல் விருப்பையும் வளங்களையும் வெளிப்படுத்த வேண்டிய தேவை அதற்குள்ளது.
பதிலளிக்கும் கடப்பாட்டுக்கான ஏனைய தடைகள்
இலங்கையில் ஏனைய பல சமகால விடயங்களுக்கு தீர்வு காணப்படாமல் இருப்பதை நிபுணர் குழு அவதானித்துள்ளது. நியாயமான சமாதானத்துக்கான எதிர்பார்ப்புகளை இவை புறம்தள்ளக் கூடும். அவை வருமாறு:
1. அரச தரப்பிலான வெற்றிக்களிப்பு. பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான அர்த்தத்தில் இது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல் சுயாட்சி, அடையாளம் போன்ற தமிழர்களின் அபிலாஷைகளை முடிவுக்கு கொண்டு வருவதாக இது அமைகிறது. இதன் இராணுவ தந்திரோபாயத்தின் மனித விலைகளை பொருட்படுத்தும் தன்மை மறுக்கப்படுவதாக இந்த வெற்றிமுழக்கம் காணப்படுகிறது.
2. இன ரீதியான தன்மையை அடிப்படையாகக் கொண்டு அரசியல் சமூக, பொருளாதார விடயங்களில் நீக்கப்படும் கொள்கைகள் மோதலின் முக்கியமான பிரச்சினைக்கு காரணமாக அமைந்தது. அந்த உள்ளீட்டுக்கொள்ளாத கொள்கைகள் இடம்பெற்று வருகின்றன.
3. போர்க் கால நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. அவசர கால ஒழுங்குவிதிகள் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மட்டுமன்றி முன்னாள் போர் வலயமானது தொடர்ந்தும் இராணுவ மயப்படுத்தப்பட்டதாக உள்ளது. அத்துடன் துணை இராணுவ குழுக்கள் பயன்படுத்தப்பட்டன. இவை யாவும் அச்சமான சூழ்நிலையையேயும் அச்சுறுத்தல் வன்முறைச் சூழ்நிலையும் விளக்குகின்றன.
4. ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள். இவை ஜனநாயக ஆட்சிக்கு முரண்பாடானவையாகும். அத்துடன் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மட்டுப்படுத்துபவையாக அமைந்துள்ளன.
5. புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பு. பல தசாப்தங்களாக புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பானது புலிகளுக்கு தார்மீக பொருள் ஆதரவாக இருந்து வந்தது. வன்னியில் மனிதாபிமான அனர்த்தத்தில் புலிகளின் பங்களிப்பை ஏற்றுக்கொள்ள அவர்களின் சிலர் மறுத்துள்ளனர். இந்த விடயம் பதிலளிக்கும் கடப்பாட்டிற்கும் நீடித்த சமாதானத்திற்கும் மேலும் தடையாக உள்ளது.
நீண்டகால இன தேசிய வாத மோதலுக்கான அடிப்படை காரணங்களை உள்ளடக்கிய விரிவான முறைமைகளை ஏற்றுக்கொள்வதற்கு இடமளிப்பதாக பதிலளிக்கும் கடப்பாட்டுக்கு இசைவான சூழல் அவசியமாகும். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்பட்ட வெளிப்படையான தன்மை கொண்ட சமூகத்தை கட்டியெழுப்புதல் வேண்டும். வெற்றிமுழக்கத்தன்மையிலிருந்தும் வெளியேறியதாகவும் இலங்கையின் இன பன்முகத்தன்மையை அடையாளம் கண்டதான அரசியல் தீர்வுக்கான இதயசுத்தியுடனான உறுதிப்பாட்டை மறுக்கும் நிலைமையிலிருந்தும் மாற்றம் பெறவேண்டும். நாட்டின் எதிர்காலத்திற்கான அத்திவாரமாக தமிழர்கள் உட்பட தனது சகல பிரஜைகளையும் உள்ளடக்கிய தீர்வை காணவேண்டிய தன்மையானது மறுக்கப்படும் நிலைமை மாறவேண்டும்.
பொதுமக்கள் பாதுகாப்பில் சர்வதேசப் பங்களிப்பு
யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின் போது ஐ.நா.வின் அரசியல் அமைப்புகள், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய செயற்பாடுகளில் தோல்விகண்டுள்ளன. யாவற்றிக்கும் மேலாக சிரேஷ்ட சர்வதேச அதிகாரிகள் பொதுமக்களை பாதுகாப்பது தொடர்பாகவும் மருத்துவமனைகள் மீது ஷெல் வீச்சுகளை நிறுத்துவது குறித்தும் பகிரங்கமாக ஆலோசனைகள் தெரிவித்தும் தனிப்பட்ட முறையில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியும் இருந்தனர்.
நிபுணர் குழுவின் கருத்தின் பிரகாரம் பொது மக்களைப் பாதுகாப்பதற்கான அழைப்புகளை வலுப்படுத்தியிருக்க முடியும். அதேசமயம் வன்னியில் இடம்பெற்ற நிகழ்வுகள் மிக பாரதூரமானவையாகும். யுத்தத்தின் முடிவில் இலங்கை தொடர்பான ஐ.நா.மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. அது இலங்கை தொடர்பான பூரணப்படுத்தப்படாத தகவலை அடிப்படையாகக் கொண்டதாக தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கக் கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக