ஜூலை 23, 2011

மும்பாய் குண்டுகளின் சொந்தக்காரர்கள்


M.ஷாமில் முஹம்மட்
மும்பாய் குண்டுவெடிப்புக்கு CIA காரணமாக இருக்கலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் முக்கிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மும்பையில்மூன்று இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 19 பேர் பலியாகியும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு வழமை போன்று இந்திய முஸ்லிம்களுக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் அரச அதிகாரிகள் ,தனியார் , மற்றும் அரச ஊடகங்கள் குண்டு வெடிப்புக்கு பின்னால் முஸ்லிம் அமைப்புகள் இருப்பதாக சம்பவம் நடந்த சில நிமிடங்கள் தொடக்கம் எந்த ஆதாரங்களும் இன்றி குற்றம் சாட்ட தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் CIA பிராந்தியத்தில் புதிய நகர்வுகளை செய்யவேண்டிய நிலையில் உள்ளதாகவும் அதனால் மும்பாய் குண்டுகளின் பின்னால் அமெரிக்க உளவு அமைப்பான CIA யின் கரங்கள் இருக்கலாம்  என்றும் இதன் மூலம் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு மேலும் அழுத்தங்களை வழங்க தேவையான வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஓய்வு பெற்ற இராணுவ தளபதி அப்துல் கையூம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டின் தொடர்பையும் இதில் மறுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உஸாமாவின் மறைவிடம் மீது அமெரிக்க இராணுவம் நடத்திய இரகசிய தாக்குதல், அமெரிக்கப் படையின் இரகசிய ட்ரோன் விமான தாக்குதல்கள், பாகிஸ்தான் தேசத்தில் அமெரிக்கா அளவு கடந்த அடாவடித்துடன் பாகிஸ்தானின் இறைமையை மீறி செயல்பட்டு வருகின்றமை, பாகிஸ்தான் மக்கள் மத்தியில் அமெரிக்காவுக்கு எதிரான மனநிலையை மேலும் வலுவாக்கியுள்ளது. இது உள்நாட்டு அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கண்ட பாகிஸ்தான் அரசாங்கம், அமெரிக்காவின் பல நடவடிக்கைகளுக்கு கட்டுபாடுகளையும் , எச்சரிக்கைகளையும் தெரிவித்தது.
அதில் ஒரு அங்கமாக பாகிஸ்தான் படைகளுக்கு பயிற்சி வழங்கிவரும் அமெரிக்க இராணுவ பயிற்சியளர்களில் 100 பேரை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது. இதை தொடர்ந்து அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆண்டு தோறும் வழங்கி வரும் 800 மில்லியன் அமெரிக்க டொலர் இராணுவ நிதியுதவியை நிறுத்துவதற்கு, பெரும்பாலும் ரத்து செய்வதற்கு முடிவு செய்தது.
அதை தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் மத்தியில் ‘அமெரிக்காவின் யுத்தத்தை பாகிஸ்தான் நடாத்த தேவை இல்லை’ என்ற கருத்து மேலும் மேலும் வலுப்பெற்று வருகின்றது. இந்த நிலையிலேயே மும்பாய் நகரில் குண்டுகள் வெடித்துள்ளது. இந்த சம்பவம் அமெரிக்கா தனது யுத்தத்தை செலவுகள் இன்றி பாகிஸ்தானில் நடாத்த, பாகிஸ்தான் அரசாங்கத்தை அழுத்த சந்தர்பம் ஒன்றை ஏற்படுத்துவதாக பார்க்கப் படுகின்றது.
பாகிஸ்தான் , ஆப்கான் மீதான அமெரிக்க பிடி தளர்த்தப்படுவது, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கும் புதிய வியூகம் ஒன்றை உருவாக்க தேவையுள்ளது என்பதை காட்டுகின்றது. இந்திய உளவு அமைப்பு ‘றோ’ இந்த குண்டுகளை வெடிக்க செய்துவிட்டு அதன் அறுவடைக்காக காதிருப்பதாகவும் பார்க்க முடியும். பாகிஸ்தான் மீதான இந்தியாவின் பிடி தளர்த்தப்படுவதும். அமெரிக்கா விரைவாக ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற போவதாக அறிவித்து அதன் அடிப்படையில் நகர்வதும் இந்தியாவின் வெளியுறவு மற்றும் உளவு துறையினர் மத்தியில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கருத முடியும்.
அமெரிக்கா பிராந்தியத்தில் தனது பிடியை தளர்த்தும் தீர்மானம் சீனா அந்த இடங்களை கண்டிப்பாக பிடித்து கொள்ளும் என்ற நியாயமான பயத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சீனா ஆப்கானிஸ்தானில் மிகவும் பாரிய முதலீடுகளை செய்து வருகின்றது. தற்போது அந்த முதலீடுகளை அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆப்கானின் தொலைத் தொடர்பு , நில வளம் ஆய்வு, அகழ்வு ,போன்ற துறைகளிலும் சீனா கால்பதித்துள்ளது ஆப்கானிஸ்தானின் வரலாற்றில் தற்போது சீனா செய்துவரும் முதலீடுகள்தான் மிக பாரியது என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதேவேளை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆண்டு தோறும் வழங்கி வரும் 800 மில்லியன் அமெரிக்க டொலர் இராணுவ நிதியுதவியை நிறுத்துவதற்கு, பெரும்பாலும் ரத்து செய்வதற்கு முடிவு செய்துள்ளமை. பாகிஸ்தானில் மேலும் சீனாவின் கால்கள் பதிய வாய்ப்பை பெற்றுகொடுக்கும் என்று இந்தியா கருத இடமுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க வெளிநாட்டு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இந்தியாவுக்கான மிக முக்கிய விஜயம் ஒன்றை மேற்கொள்ள இருக்கின்றார் என்ற அறிவித்தல் வெளியானது. இதன் பின்னர் இந்த குண்டுகள் வெடித்தன. என்பது அவதானிக்க படவேண்டும் குண்டுகள் வெடித்து 20 பேர் வரை கொல்லபட்ட பின்னர் நேற்று 18.7.2011 ஹிலாரி கிளிண்டன் இந்தியா வந்தடைந்தார். இவர் தனது குழுவுடன் இன்று 19.7.2011 இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ் ஆகியோருடன் மிகவும் இரகசிய பேச்சில் ஈடுபட்டுள்ளார். அந்த இரகசிய பேச்சு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் தொடர்பானது என்று மட்டும் அறிவிக்கபட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது .
இந்த குண்டு வெடிப்புகள் அமெரிக்க , இந்திய இராஜதந்திர பேச்சில் பிரதான இடத்தை பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை , குண்டு வெடிப்பினால் ஏற்படுதபட்டுள்ள நிலை இந்தியாவின் வலுவான  இராஜதந்திர நகர்வுகளுக்கு அமெரிக்காவின் உதவிகளை பெற வாய்ப்புகளை திறந்து கொடுத்துள்ளது .
அதேவேளை இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக் விஜய்சிங் மும்பை குண்டு வெடிப்பில் ஆர்.எஸ்.எஸ் – இந்து பயங்கரவாத அம்மைப்பு- இயக்கத்துக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்பதையும் மறுக்க முடியாது என்றும் இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ் தொடர்பு குறித்த ஆதாரங்கள் தம்மிடம் இல்லை என்றாலும் பயங்கரவாத நடவடிக்கையில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபட்டு வருவதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத் மற்றும் CIA அமெரிக்க உளவு அமைப்புக்கும் உள்ள உறவுகள் பற்றி பலமான சந்தேகம் கொண்ட செய்திகள் வெளியானமை குறிபிடத்தக்கது.
இந்திய உளவு அமைப்பான ‘றோ’ ஹிந்து பயங்கரவாத அமைப்புகளை தனது தேவைக்கு பயன்படுத்தாது என்று கூறுவதற்கு முடியாது. காரணம் இலங்கை , மாலைதீவு , பங்களாதேஷ் போன்ற நாடுகளில் ஆயுத குழுக்களை பயன்படுத்தி தனக்கு தேவையான அரசியல் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள அழிவு நாசவேலைகளை துண்டிவிட்டுள்ளது. என்பதற்கு போதிய சான்றுகள் உள்ளன. இதனால் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டும் உள்ளனர் .
இலங்கை இந்தியாவுடன் முரண்பட்ட நகர்வுகளை வெளிப்படுத்திய போது இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளார்களும், இந்திய உளவுத் துறையான ‘றோ’வும் இலங்கை விடயத்தில் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களை பயன்படுத்தி இலங்கையில் தமிழ் ஆயுத போராட்டத்தை உருவாக்க தேவையான உதவிகளை செய்துவந்துள்ளது. பொருளாதார , இராணுவ உதவிகளை தேவையான போது வழங்கிவந்துள்ளது.தனது நலனை பாதுகாக்க இந்தியா மற்றவரின் நிம்மதியை, அமைதியை குழப்ப தயக்கம் காட்டவில்லை . புலிகள் மிகவும் பலவீனமாக இருந்தபோது அன்று தமிழ்நாடு முதல் அமைச்சராக இருந்த எம் . டி. ராமசந்திரன் பெரும் தொகை பண உதவி, ஆயுத உதவிகளை செய்து புலிகளை வளர்த்தார் என்பதை பிரபாகரனே தெரிவித்துள்ளார். அந்த உதவிகள்தான் தம்மை மிகவும் பலமான சக்தியாக வளர்த்தது என்றும் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று 1988 நவம்பர் மாதம் மாலைதீவு PLOT என்ற இலங்கை தமிழ் ஆயுத போராட்ட அமைப்பால் பகுதியளவில் கைப்பற்றபட்டது. மாலைதீவு ஜனாதிபதி உலக நாடுகளில் உதவியை கோரினார். காத்திருந்த இந்தியா உடனடியாக விரைந்தது காப்பாற்றுவது போன்று காப்பாற்றி தனது பிடியில் மாலைதீவை வைத்திருக்க பல ஒப்பந்தங்களை செய்து கொண்டது. அந்த PLOT என்ற உமா மகேஸ்வரன் தலைமயிலான தமிழ் ஆயுத போராட்ட அமைப்பு இந்தியாவினால் , இந்தியா உளவு அமைப்பான ‘றோ’ வினால் வளர்க்கப்பட்ட அமைப்புத்தான் என்பது குறிபிடதக்கது.
இந்தியா, அன்று மாலைதீவை தனது வலுவான பிடியில் வைத்துகொள்ள ஆடிய நாடகமாகத்தான் அது பார்க்கப்பட்டது. Operation Cactus – Maldives, 1988 இந்த நடவடிக்கையில் சிக்கிகொண்ட PLOT உறுப்பினர்கள் சிலருக்கு மாலைதீவு நீதிமன்றம் மரணதண்டனை விதித்தது ஆனால் இந்தியாவின் அழுத்தத்தின் காரணமாக அந்த மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.
அதேபோன்று பங்களாதேஷ் ,நேபாளம் மற்றும் பூட்டான் ஆகியனவும் இந்தியாவின் பிடியில் இருந்த இருக்கும் நாடுகள்தான் இவற்றை தனது பிடியில் வைத்திருக்க பல அரசியல் , பொருளாதார . ஒப்பந்தங்கள் , இராணுவ நடவடிக்கைகள் என்பனவற்றை மேற்கொண்டு வந்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ்சை பிரிக்க இந்தியா பெரிய பங்காற்றியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து பிரிவினை கோரி ஆர்பாட்டங்களையும் பின்னர் ஆயுத போராட்டத்தையும் உருவாக்கவும் வளர்க்கவும் இந்தியா பகிரங்கமாக செயல்பட்டுள்ளது.
இறுதியாக பங்களாதேஷ், பாகிஸ்தானில் இருந்து பிரிந்தது. பிரிக்கப்பட்ட பங்களாதேஷ் இந்தியா சார்பான போக்கையே கடைபிடிக்க வேண்டியுள்ளது. அதேபோன்று இந்தியா. பூட்டானை அதன் வெளிநாட்டு கொள்ளை , மற்றும் பாதுகாப்பு விடையம் இவற்றில் இந்தியாவின் அனுமதி இன்றி எந்தவென்ரையும் சுயமாக செய்ய முடியாத படி தனது பிடியில் வைத்துள்ளது. இதற்கு 2007 ஆண்டு கைச்சாத்தான பூட்டான் , இந்திய உடன்படிக்கை சிறந்த உதாரணமாகும்.
இந்தியாவில் குண்டுகளுக்கு பின்னால் ஹிந்து பயங்கரவாமும் , இந்திய இராணுவ அதிகாரிகளின் உதவியும் செயல்பட்டு வந்துள்ளமை ஆதார பூர்வமாக இனம் காணப்பட்டுள்ளது. பல தொடர் குண்டு வெடிப்புகளிலும் முஸ்லிம் படுகொலைகளிலும் ஹிந்து பயங்கரவாதம் ஈடுபடுவது சாதாரணமாக அனைவருக்கும் தெரிந்த விடயமாக இன்று இருந்தாலும் அவர்கள் எவரும் தண்டிக்கப் படுவதில்லை. ஆதார பூர்வமாக சாட்சிகளுடன் பல வழக்குகள் இந்தியா நீதி மன்றங்களில் தேங்கி கிடக்கின்றது. ஆனால் அவை விசாரிக்க படுவதில்லை விசாரணைக்கு வந்தாலும் தீர்ப்புகள் வருவதில்லை, தீர்ப்புகள் வந்தாலும் அவை உண்மையான தீர்ப்பாக இருப்பதில்லை என்ற நிலைதான் இந்தியாவில் இருக்கிறது. இதை சாதாரன ஒரு நிகழ்வாக கொள்ளமுடியாது இதற்கு பின்னால் மிகவும் பாரிய சக்தி இருப்பது மிகவும் தெளிவாக தெரிகின்றது.
இதில் மற்றுமொரு பக்கம் இருப்பதையும் மறுக்க முடியாது அதாவது பாகிஸ்தான் இந்தியா உறவில் ஏற்படுத்தப்படும் வலுவான பிளவுகளின் ஊடாக சீனா தனக்கு சாதகமான நிலையை பிராந்தியத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்பதாகும். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பாகிஸ்தான் , இந்தியா உறவில் இந்தியா சற்று சாந்தமான முகத்தை உலகிற்கு காட்ட முற்பட்டுள்ளமை அவதானிக்கதக்கது. இந்தியா கஷ்மீர் பிரச்சினையையும் கூட பாகிஸ்தானுடன் பேச தயாராகவுள்ளதாக தெரிவித்து சில நகர்வுகளை செய்துள்ளது. இந்த இந்தியாவின் புதிய நகர்வு சீனாவை சங்கடப் படுத்தியுள்ளதாக நோக்கினாலும் வெடிக்கும் குண்டுகளுடன் அவர்களை தொடர்பு படுத்த போதுமான ஆதரங்கள் எதுவும் இல்லை என்பது கவனிக்கதக்கது.
ஆக இந்தியாவில் வெடிக்கும் குண்டுகளுக்கு காரணமாக உடனடியாக முஸ்லிம் பெயர்கள் பயன்படுத்தபடுவது கூட உளவு துறைகளின் ஊடகங்கள் மீதான செல்வாக்கை காட்டுகின்றது. இந்த படு மோசமான நிலையிலும் முஸ்லிம்கள் பொறுமையாக இருப்பது ஆச்சரியமான விடையம். முஸ்லிம் சமூகத்தில் உள்ள சில வாலிபர்கள் சில குண்டு வெடிப்புகளுடன் தொடர்பு பட்டாலும் அவ்வாறான சம்பவங்கள் மிகவும் சிறிய அளவில்தான் இடம்பெற்றுள்ளது. இந்திய முஸ்லிம்களை இந்து பயங்கரவாதம் தலையில் கடப்பாரையால் அடிக்கும்போது அதை தடுக்க முஸ்லிம் தரப்பு கையை உயர்த்தினாலும் அதை இஸ்லாமிய பயங்கரவாதமாக இந்திய அரசும் , இந்திய ஊடகங்களும் சித்தரித்து வருகின்றது .
நமது பிராந்தியத்தில் இந்தியா மிகவும் வேகமாக புதிய வியூகம் வகுக்க தொடங்கிவிட்டுள்ளது, இந்தியாவின் புதிய வியூகத்தில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதை நிகழ்வுகள் காட்டுகின்றது. அவதானம் வேண்டும்.  மும்பாய் குண்டுகளை வைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவற்றின் சொந்தக்கரகர்கள் உளவு அமைபினர்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக