ஜூலை 25, 2011

Pakistan


பாகிஸ்தானிய இராணுவ அரசியல் - சிறு குறிப்பு

பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் முறுகல் நிலை மேலும் மேலும் வலுவடைந்து செல்கிறது. ஒரு பக்கம் அமெரிக்கா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை விடாமல் பாகிஸ்தானின் மேல் ஏவுகிறது. தலிபான் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அதற்கு விளக்கமும் அழிக்கிறது. ஆனால் உண்மையில் அங்கு கொல்லப்படுவது அப்பாவி பொது மக்களே.


 பாகிஸ்தானிய பாராளுமன்ற அமர்வு நடைபெற்ற போது என்றுமே இல்லாதவாறு சுமார் 14 மணித்தியாலங்கள் அமெரிக்காவின் அபோதாபாத் தாக்குதல் பற்றியும் வசிரிஸ்தான் மீதான தாக்குதல்கள் பற்றியும் வாதப்பிரதிவாதம் நடைபெற்றது.

இதில் விசேட அம்சம் பாகிஸ்தானிய இராணுவ தளபதியும் உயர்மட்ட ஜெனரல்களும் மேற்படி அமர்வை தொடர்ந்து அவதானித்ததாகும். கடந்த சில வருடங்களாக அரசு இயந்திரம் ஒரு புரமும் இராணுவ இயந்திரம் மறு புரமும் தத்தமது போக்கில் செயற்பட்டு வந்தன.

இம்முறை வழமைகளிற்கு மாறாக துருக்கிய இராணுவம் எவ்வாறு துருக்கிய பாராளுமன்ற அமர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறதோ அதே போன்ற ஒரு நிலை பாகிஸ்தானில் உருவாகியுள்ளது.

சீனா தனது நேற்றைய உத்தியோகபூர்க அறிக்கையில், பாகிஸ்தானிற்கான வெளிப்படையான அரசியல் இராணுவ ஆதரவு எப்போதும் உண்டென அறிவி்த்துள்ளமையானது அமெரிக்க இந்திய இராணுவ கூட்டிற்கு ஒரு பின்னடைவை எதிர்காலங்களில் நிச்சயமாக உருவாக்கும். சீனாவின் இந்த அறிவிப்பானது மிகவும் அவதானத்துடன் நோக்கப்பட வேண்டிய ஒரு கூற்றாகும். 
பாகிஸ்தான் அமெரிக்க விரோத போக்கை கைக்கொள்ளுமானல் சீன அரசை சார்ந்து நிற்கும் என்பதில் ஐயமில்லை. இது ஒரு தாகூத்தை எதிர்க்க இன்னொரு தாகூத்தை துணைக்கழைக்கும் நிலையாகவே அமையும்.

இதில் மைய விடயம் பாகிஸ்தானிய இராணுவமாகும். அது எவ்வாறான போக்கை கடைபிடிக்கப் போகின்றது என்பதே இங்கு முக்கிய விடயமாகும். பாகிஸ்தானிய அரசியலில் தலையீடு செய்து அமெரிக்க அடாவடித்தனங்களிற்கு சில தீர்வுகளை முன்வைக்கும் நிலையை எடுக்கப் போகிறதா அல்லது ஒரு இராணுவ புரட்சியை ஏற்படுத்துவதன் மூலம் பாகிஸ்தானை ஒரு தீர்க்மான நிலைக்கு இட்டுச் செல்லப்போகிறதா இல்லை அமெரிக்காவால் அண்மையில் தயார்படுத்தப்பட்டுள்ள பர்வீஸ் முசாரப்பின் ஆலேசனையின் பேரில் இயங்கப்போகிறதா என்பது கேள்விக்குரிய விடயமாகும்.

அண்மையில் பாகிஸ்தானிய இராணுவ கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள சடுதியான மாற்றங்கள் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அஸிப் சர்தாரிக்கு நெருக்கமான சில தளபதிகள் பின் நகர்த்தப்பட்டு கார்கில் சண்டைக்கான திட்டமிடலில் பங்குகொண்ட தளபதிகள் முக்கிய கட்டளை பொருப்புக்களிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமையானது பாகிஸ்தானிய இராணுவ தலைமை எதற்கோ தயாராவது போல் தெரிகிறது.



பாகிஸ்தானின் இறைமையை காப்பதற்காக எந்த விலையையும் கொடுக்க பாகிஸ்தானிய இராணுவம் தயாராகிறதா இல்லை பாகிஸ்தானிய இராணுவத்திற்கும்C.I.A.யிடம் ஒரு விலை உள்ளதா என்பதை இனி வரும் காலங்கள் விடை பகரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக