மார்ச் 01, 2011

Navy


பிறவுண் நீர் கடற்படை உருவாக்குவதே இலங்கை அரசாங்கத்தின் அடுத்த இலக்கு –  சுபத்திரா



2007 – 08 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நீலநீர் கடற்படை ((blue-water navy ) என்ற தகுதியை அடைந்து விட்டதாக இலங்கைக் கடற்படை கூறியிருந்தது நினைவிருக்கலாம்.    விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை இலங்கைக் கடற்படை அடுத்தடுத்து  மூழ்கடித்திருந்த நேரம் அது.   அதுவும் இலங்கையின் கரையில்   இருந்து 1000   கி.மீ தொடக்கம் 2000    கி.மீ தொலைவில் அந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்திருந்தன.
அப்போதைய கடற்படைத்   தளபதி மற்றும்
அதிகாரிகள்   இலங்கைக் கடற்படை   ‘நீலநீர் கடற்படை ’யாகி    விட்டதாக தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டிருந்தனர்.   போர் நடந்து கொண்டிருந்த காலம் என்பதால், அப்போது   இராணுவ ஆய்வுப் பத்திகளுக்கு (கட்டுரைகளுக்கு) அதிக மவுசு இருந்தது.
இராணுவ கட்டுரை  எழுத்தாளர்களும் அவர்கள் சொன்னதை அப்படியே ஏற்று எழுதினர்.   நீலநீர் கடற்படை என்றால் என்ன என்று அவர்கள் கேள்வி எழுப்பவும் இல்லை. நீலநீர் கடற்படை என்றால் அதற்குரிய  தகுதிகள் என்ன என்று ஆராயவும் இல்லை.  இப்போது மீண்டும் நீலநீர் கடற்படை பற்றிய ஒரு கேள்வி எழுந்துள்ளது.   அதற்குக் காரணம் புதிய கடற்படைத் தளபதியாக அண்மையில் பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸநாயக்க தான்.
தனக்கு முன்னே இருந்த கடற்படைத்  தளபதி மற்றும் அதிகாரிகள் கூறியது போன்று இலங்கைக் கடற்படை, நீலநீர் கடற்படை என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட வில்லை என்று அவர் கூறியுள்ளார்.  நீலநீர் கடற்படை என்பதை சிலர் தவறாக விளங்கப்படுத்தியுள்ளார்கள்.    அதைப் பலர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
இலங்கைக் கடற்படை பலம் வாய்ந்த ஒன்றாக இருந்தாலும், ஆழ்கடல் நடவடிக்கைகள் சிலவற்றை மேற்கொண்டிருந்தாலும் நீலநீர் கடற்படையாகி விடுவது ஒன்றும் சுலபமான காரியமில்லை என  வைஸ் அட்மிரல் சோமதிலக்க   திஸநாயக்க கூறியுள்ளார்.
 அவரது கருத்தின்படி நீலநீர் கடற்படை என்று உலகில் இப்போது இருப்பது இரண்டு நாடுகளினது கடற்படைகள் தான்.   ஒன்று பிரித்தானியக் கடற்படை. இன்னொன்று   அமெரிக்க கடற்படை இது தான் உண்மையும் கூட.
நீலநீர் கடற்படை (blue-water navy) , பிறவுண்  நீர் கடற்படை(brown- water navy) , பச்சைநீர் கடற்படை (green- water navy) என்று  மூன்று வகைப்படுத்தல்கள் உள்ளன. இதில் நீலநீர் கடற்படை என்ற பதத்தை உருவாக்கியது பிரித்தானியா தான்.
உலகில் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தைக் கொண்டிருந்த நாடு அது.     அதன் கடற்படைப் பலம்    தான்      உலகில் பல நாடுகளைக் கைப்பற்றி ஆட்சி செய்வதற்கு காரணமாக அமைந்தது.     பின்னர்      பிரித்தானியாவின் கடற்படை மேலாதிக்கத்தை    அமெரிக்கா  முந்தி விட்டது வேறு கதை.   ஆனாலும் பிரித்தானியக் கடற்படை இன்னம்   நீலநீர் கடற்படை என்ற தகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
சமுத்திரப் பெருவெளியில்  -  ஆழ்கடலில் ஆதிக்கம் செலுத்துகின்ற கடற்படை தான்  ‘நீலநீர் கடற்படை’. அதாவது   தமது நாட்டின் பொருளாதார எல்லைக்கு அப்பாலும் கடற்படையை நிலை நிறுத்தியிருப்பது, அதன் மூலம் ஏனைய நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவது போன்றவை தான் நீலநீர் கடற்படையின் தகைமைகள்.
பல ஆயிரம் கிலோ மீற்றர்களுக்கு அப்பால் நீலநீர் கடற்படை இயங்கிக் கொண்டிருக்கும்.   தனியான தளங்கள் இல்லாது போனாலும் பாரிய போர்க்கப்பல்களும், விமானந்தாங்கிகளும்   நீண்டகாலம் குறிப்பிட்ட பிரதேசத்தில்   தரித்து   நின்று தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தும்.   இந்தவகையில்  இப்போது   நீலநீர் கடற்படையாக செயற்படும் நிலையில் அமெரிக்காவினதும்  பிரித்தானியாவினதும் கடற்படைகளே உள்ளன.
பிரான்ஸ், ரஷ்யா போன்றன முன்னர் இந்த அந்தஸ்துக்காக கடும் போட்டியில் இருந்த போதும் இப்போது அவற்றின் ஆர்வம் குறைந்து விட்டது.   அவுஸ்ரேலியா இதற்கான வசதிகள் சிலவற்றைக் கொண்டுள்ள போதும் அதில் நாட்டம் கொள்ளவில்லை.        நீலநீர் கடற்படை என்பது குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே பெறக் கூடிய தகுதி.   ஏனென்றால் பூமியின் எல்லைகள் மிகவும் குறுகியவை.
இந்தக் குறுகிய கடற்பரப்புக்குள் பல  நீலநீர் கடற்படைகள் இருந்தால் அது ஆழ்கடல் மோதல்களுக்கே வழிவிடும்.    ஆனாலும் இப்போது ஆசியாவில் நீலநீர் கடற்படை என்ற தகுதி நிலைக்கான போட்டிகள் தீவிரமடைந்துள்ளன.  இந்தியா, சீனா போன்ற நாடுகளுடன் தென்கொரியாவும் கூட இதற்கான போட்டியில் இறங்கியுள்ளது.
இந்தியாவும், சீனாவும் நீலநீர் கடற்படைக்கான தகுதியை விரைவாக அடைவதற்கான தீவிரமாகப் போட்டியிடுகின்றன.  தென்கொரியாவோ அதற்கான ஒரு முன்னாயத்தமாக போர்க்கப்பல்களைத் தயார்படுத்தத் தொடங்கி விட்டது.  2020ஆம் ஆண்டில் வல்லரசாக வேண்டும் என்பது இந்தியாவின் கனவு.
அதுபோலத் தான் தென்கொரியாவுக்கு 2020இல்  நீலநீர் கடற்படையாக வேண்டும் என்று ஆசை.   இப்போது இந்தியா, சீனா போன்ற நாடுகள் எல்லாமே பிறவுண் நீர் கடற்படைகள் தான்.     அதாவது பிறவுண் நீர் கடற்படை என்றால் ஒரு நாட்டின் பொருளாதார கடல் எல்லைக்கு அப்பால் அதாவது  370 கி.மீற்றருக்கும் அப்பால் தமது கடற்படையை நடவடிக்கையில்  ஈடுபடுத்தும் ஆற்றலைக் கொண்டிருக்க வேண்டும்.   இந்தத் தகுதியை இந்தியாவும், சீனா கொண்டிருக்கின்றன.
இலங்கை கடற்படை  முன்னர் நீலநீர் கடற்படை என்று உரிமை கோரினாலும் அந்த நிலையில் இல்லை.  அதற்கடுத்த நிலையான பிறவுண் நீர் கடற்படை என்ற நிலையில் கூட அது இல்லை.
விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல்களை 1000 தொடக்கம் 2000 கி.மீற்றர் வரை சென்று அழித்திருந்தாலும் அவை புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் நடவடிக்கையே தவிர,  நிரந்தரமான ஆழ்கடல் செயற்பாடல்ல.   நீலநீர் கடற்படை என்றால் அந்தப் பிராந்தியத்தின் ஆதிக்கத்தைத் தொடர்ந்து பேண வேண்டும்.
அந்த வகையில் இலங்கைக் கடற்படையிடம் இப்போது பிறவுண்     நீர் கடற்படை என்ற தகுதி கூடக் கிடையாது.   இலங்கைக் கடற்படை இப்போது தனது எல்லைக்குள் தான் பிரதானமாகச் செயற்படுகிறது.  அதைவிட அவ்வப்போது பொருளாதார கடல்    எல்லைப் பகுதியிலும் ரோந்து கண்காணிப்பை மேற்கொள்கிறது.   இப்போது இலங்கைக் கடற்படையின் அடுத்த இலக்கு பிறவுண் நீர் கடற்படை என்ற தகுதியைப் பெறுவது தான்.
அதற்காக ஆழ்கடல் கண்காணிப்பையும் அது சார்ந்த கடல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போகிறது.   இதற்கென ஐந்தாண்டு திட்டம் ஒன்றை பாதுகாப்பு அமைச்சு தயாத்துள்ளது.   இலங்கைக் கடற்படையின் ஆழ்கடல் நடவடிக்கைளுக்கு இந்தியா வழங்கிய ஆழ்கடல் ரோந்துப் படகான ‘சயுரால’  பெரிதும் உதவியாக இருந்தது.  ஆனால் இப்போது அதை இந்தியா மீளப்பெற்று விட்டது.
இந்தநிலையில் இலங்கைக் கடற்படை இரண்டு ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை வாங்கவும், மேலும் சில தாக்குதல் படகுகளைக் கொள்வனவு செய்யவும் திட்டமிட்டுள்ளது.  இதன்மூலம்  பொருளாதார கடல் எல்லையின் மீதான ஆதிக்கத்தை நிலை நாட்டப் போகிறது இலங்கைக் கடற்படை.
இது வெறுமனே இலங்கையின் பொருளாதார வளங்களையும் நலன்களை  முக்கியப்படுத்துவதாக மட்டும் அமையவில்லை.  பிறவுண் நீர் கடற்படை என்ற தகுதியைப் பெறுவதும் தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக